thamizhkrishna

யாம் யார்

இன்று இனிய நாள். உலகத் தமிழர்களின் நன்னாள். வாழ்வின் பொன்னாள். சித்திரை ஒன்று. தமிழ் வருடப் பிறப்பின் துவக்க நாள். அனைவர் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கும் திருநாள்.

மழை நாளும் கூட. பூமி குளிர்ந்தது எனச் சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவிற்கு நல்ல மழைதான். கோடையின் வெப்பம் சற்றேனும் குறையும். எங்கள் ஊர் மக்கள் இது நல்ல தொடக்கம் என முகமலர்ச்சி அடைந்ததோடு இந்த வருடம் நன்றாக இருக்கும் என்றும் பேசிக் கொண்டார்கள். அவர்களின் நம்பிக்கை இந்த ஜெய வருடத்தில் ஜெயிக்கட்டும்.

எங்கள் ஊரின் தற்போதைய பெயர் தொப்பலாக்கரை. பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. பரளச்சியில் மேல்நிலை படிக்கும் போது மாட்டுச்சாணம் அதிகம் இருக்கும் ஊர் என்று தமிழய்யா ஒருமுறை சொன்னார். உண்மைதான். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஏராளமான மாடுகள் இருந்தன.

அழகிய ஊர். பிறந்து வளர்ந்த ஊரை குறைத்துச் சொல்ல யாருக்குத்தான் மனம் வரும், ஊரில் நிறையக் குளங்கள் இருக்கின்றன. ஊரின் நடுவே கொஞ்சம் பெரிய ஊரணி உள்ளது.

நல்ல மனிதர்கள் வாழ்ந்த, வாழும் எங்கள் ஊர், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்திலும், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியிலும், இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதிக்குள்ளும் வருகிறது. பல சாதனையாளர்களையும், புனித ஆத்மாக்களையும் ஈன்றெடுத்த மண் என்ற பெருமை எங்களின் மாவட்டத்துக்கு உண்டு.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று யாம் ஊரில் இருந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. பாராளுமன்றத் தேர்தல் காரணமாக முன்கூட்டியே எங்கள் கல்லூரியின் பணிநாட்கள் முடிந்து விட்டதால் இந்த வருடப் புத்தாண்டிற்கு ஊருக்கு வருவது சாத்தியமானது. யாம் கோயமுத்தூரிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறோம்.

Related Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top